கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - அமெரிக்க காவல்துறையினர் சிலர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள்
Jun 2 2020 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அமெரிக்க காவல்துறையினர் சிலர், போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்காவில் மினியபாலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற இளைஞர் கடந்த 25-ம் தேதி காவல்துறையினரால் கொல்லப்பட்டார். கள்ளநோட்டு புகாரில் கைது செய்யப்பட்ட அவரை, போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் மக்கள் கொந்தளித்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. நேற்று வெள்ளைமாளிகை முன்பும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக, போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனால், போலீஸ் மற்றும் அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.
ஒருபுறம் காவல்துறையினர் அராஜகத்துக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலையில், மறுபுறம் காவல்துறையினர் சிலர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளனர். போர்ட்லேண்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருப்பினத்தவரை தாக்கி கொன்ற தங்களது சக ஊழியர்களின் கொடூர நடவடிக்கைகாக, மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டனர். இதைக்கண்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினருக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்க போலீசார் மன்னிப்புக்கோரும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.