2021-ல் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் - அமெரிக்க தேசிய தொற்றுநோய் மைய இயக்குநர் நம்பிக்கை
Jul 10 2020 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டுவிடும் என, அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பாசி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரசால், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி குறித்து விளக்கிய அமெரிக்க தேசிய தொற்று நோய் மையத்தின் இயக்குனரான டாக்டர் அந்தோனி பாசி, பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே, வைரசை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வரும் தொற்று நோய்களைச் சமாளிக்க, உலகளாவிய ஒத்துழைப்பும், வெளிப்படைத்தன்மையும் மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும், மொத்தமாக, 57 தடுப்பு மருந்துகள், ஆய்வகத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அந்தோனி பாசி தெரிவித்துள்ளார்.
சில தடுப்பு மருந்துகள், அந்த கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும், அவற்றை வைத்து, இம்மாத இறுதியில் அடுத்தகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது, 2021ம் ஆண்டின் துவக்கத்திலோ, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என டாக்டர் அந்தோனி பாசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.