சிங்கப்பூரில் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ஆளும்கட்சி - பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து
Jul 11 2020 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான People's Action கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் திரு. மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான People's Action கட்சி ஆட்சியில் உள்ளது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்னதாகவே பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால், சமூக இடைவெளியை கடைபிடிக்க, வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முகக்கவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர்.
காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான ஆளும் People's Action கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
இதனிடையே, சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் திரு. மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சிங்கப்பூர் மக்களுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.