சிரியாவில் உணவின்றித் தத்தளிக்கும் பொதுமக்கள் : துருக்கி வழியாக மேலும் ஓராண்டுக்கு உதவ முடிவு
Jul 12 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி வழியாக மேலும் ஓராண்டுக்கு மனித நேய உதவிகளை சிரியாவுக்கு அனுப்பும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் மட்டும் ஐந்து லட்சம் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் புலம் பெயர்ந்த அகதிகளாக தவித்துவருகின்றனர். இவர்களுக்கு துருக்கி வழியாக உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுவருகின்றன. இதற்கான கால அனுமதி நேற்று முன்தினம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மேலும் ஓராண்டுக்கு துருக்கி வழியாக உதவிப்பொருட்களை அனுப்ப ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த உதவிப் பொருட்களை சிரிய அரசிடம் அளித்து, பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ரஷ்யா இத்தீர்மானத்துக்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்களித்தது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகள் கொண்டுவந்த இத்தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது. இருப்பினும் இத்தீர்மானம் வெற்றிபெற்றது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா மற்றும் டொமினிக்க குடியரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.