பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் - பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் கட்சிகள் திட்டம்
Sep 22 2020 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவர் பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் ஷாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இம்ரான்கான் தலைமையிலான நிர்வாகம் திறமையில்லாத, மோசமான நிர்வாகம் என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கூறி வரும் எதிர்க்கட்சிகள் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இம்ரான்கான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி, நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்த முக்கிய எதிர்க்கட்சிகள் முன்வந்துள்ளன. இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அனைத்து கட்சிகள் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான 26 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இம்ரான்கான் அரசுக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை 3 கட்டங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.