அமெரிக்காவின் டென்னஸி நகரில் அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பிடன் இடையே காரசார விவாதம் - அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர்தான் டொனால்ட் ட்ரம்ப் என ஜோ பிடன் கடும் தாக்கு
Oct 23 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான இறுதிக்கட்ட விவாதத்தில், அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர்தான் டொனால்ட் ட்ரம்ப் என ஜோ பிடன் விமர்சித்தார். அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு, சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேராக 3 விவாதங்களிலும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரு விவாதத்திலும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஓஹியோவில் முதல்கட்ட நேரடி விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 15-ம் தேதி மியாமியில் இரண்டாம் கட்ட விவாதம் நடைபெறவிருந்த நிலையில், அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இறுதிக்கட்டமாக டென்னஸி மாகாணம், Nashville-யில் டிரம்ப் - ஜோ பிடன் இடையே இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு கொரோனா பரவ தன்னுடைய அரசு காரணமில்லை என்றும், தவறு செய்தது சீனாதான் என்றும் குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜோ பிடன் பேசுகையில், அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர்தான் டொனால்ட் ட்ரம்ப் என கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவிலிருந்து ட்ரம்புக்கு பணம் வருவதாக ஜோ பிடன் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், சீனா, ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை எனவும், தன்னுடைய வங்கிக் கணக்கு வெளிப்படையானவை எனவும் பதிலளித்தார். வடகொரிய விவகாரத்தை ஒபாமா சிக்கலாக்கி வைத்திருந்தார் என்றும், வடகொரிய விவகாரத்தில் ஒபாமா செய்ய முடியாததை தமது அரசு செய்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.