12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமேசான் காடழிப்பு - பருவநிலை மாற்றத்திற்கு வித்திடும் ஆபத்து அதிகரிப்பு
Dec 1 2020 7:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டில் பரவிக்கிடக்கும் அமேசான் காட்டுப்பகுதியில், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காடழிப்பு நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிபர் போல்சனாரோவின் திறமையற்ற நிர்வாகமே இதற்குக் காரணம் என புகார் கூறப்படுகிறது. இதைப்பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காண்போம்.
அமேசான் காடுகள் தென்னமெரிக்காவின் 9 நாடுகளுக்குள் பரவிக்கிடக்கின்றன. இக்காடுகள், பூமியில் சுற்றுச்சூழலியலுக்கு மிகப்பெரும் உதவி புரியும் வகையில் ஏராளமான அடர்வனப்பகுதிகள், ஆறுகள், ஏரிகளைக்கொண்டுள்ளன. இக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருவதாக கருதப்படும் நிலையில், பிரேசில் அதிபராக போல்சனாரோ பதவியேற்ற பின் காடழிப்புக்கு எதிரான சட்டவிதிகளை புறந்தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் அதிக எண்ணிக்கையில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 9.5% மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன. சுமார் 11 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் சுற்றளவில் 2020ம் ஆண்டில் மட்டும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இங்கிலாந்தின் லண்டன் நகரைப் போன்று 7 மடங்கு அதிகமான பரப்பளவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், உலகிலேயே அதிகமான அளவு கரியமிலவாயுவை உட்கொள்ளும் அளவுக்கு மரங்கள் அமேசான் காடுகளில் இருக்கும் நிலையில், தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவது உலக அளவில் மிகமோசமான பருவநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் தற்போது பிற நாடுகளிடையே எழுந்துள்ளது.