ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும் : இந்தியாவிற்கு அமெரிக்கா மிரட்டல்
Jan 16 2021 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால், பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரையில் இருந்து வானில் 400 கிலோமீட்டர் தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்ய, கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புக்கு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கான முன்பணத்தை இந்தியா, ரஷியாவிடம் செலுத்திவிட்டது.
மீதமுள்ள தொகையை செலுத்தும் நடைமுறைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தின் முதல் தொகுப்பை, இந்தியாவிடம் இவ்வாண்டு இறுதிக்குள் ரஷியா வழங்க உள்ளது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்குவதை ஆரம்பம் முதலே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும், இல்லாவிடில் இரு நாட்டு உறவில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. ஆனால் தற்போது வரை ஏவுகணை வாங்கும் விவகாரத்தில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால், இந்தியா பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னரும், இதே நிலையே தொடரும் எனவும், எஸ்-400 விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை எனவும் அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை வாங்கிய நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மீது, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.