பெரு நாட்டில் விநோத நோயால் பாதிக்கப்பட்ட பெண் - தற்கொலை செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி
Mar 4 2021 7:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் ஒரு பெண்ணுக்கு உயிரிழப்பதற்கான உரிமை இருப்பதாக நீதிமன்றம் அறிவித்ததற்கு அப்பெண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அனா ஈஸ்ட்ரடா என்ற 44 வயது பெண்ணுக்கு கடந்த முப்பது ஆண்டு காலமாக வினோதமான நோய் ஒன்று பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நோய் பாதிப்புக்கு உள்ளானால் உடல் முழுவதும் உள்ள தசைகள் செயல்படாது என்பதால் அந்த பெண் படுக்கையிலேயே இருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், தாம் தற்கொலை செய்வதற்கான அனுமதியை அளிக்கவேண்டும் என லிமா நீதிமன்றத்தில் அப்பெண் மனு அளித்திருந்தார். வழக்கு விசாரணைக்கு காணொளி காட்சி மூலம் படுக்கையில் இருந்தவாறே அப்பெண் ஆஜரானார். இறுதியில் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அந்நாட்டு அரசும் அறிவித்துள்ளது. இது தனிப்பட்ட பெண்ணின் வழக்கு என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமத்தில் இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பு பேருதவியாக இருக்கும் என அனா ஈஸ்ட்ரடா தெரிவித்துள்ளார். அனா ஈஸ்ட்ரடா உயிரிழக்க முடிவெடுத்த பின் பத்து நாட்களுக்குள் அதற்கான உதவியை அரசு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.