கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்க அரசு அறிவிப்பு
May 14 2021 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசும் செலுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான பொது இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஓராண்டு கடின உழைப்பு மற்றும் அதிக அளவு தியாகங்களுக்கு பிறகு விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவையாக மாறிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வரை முகக்கவசம் அணியுங்கள் என்றும் அமெரிக்க மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.