ஏவுகணை சோதனையால் உலகையே அச்சுறுத்தி வரும் வடகொரியா : கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனை செய்து மிரட்டல்
Sep 16 2021 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா தொடர்ந்து செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் வடகொரியா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வார இறுதியில் புதிய தொலை தூர ஏவுகணையை அடுத்தடுத்து 2 முறை சோதித்ததாக வடகொரியா தெரிவித்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஜப்பான் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்த இரண்டே நாட்களில், வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து உலகை அதிர வைத்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை கொண்ட இரண்டு ஏவுகணைகளை வடகொரியா மத்திய தீவு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையில் கடலுக்குள் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவ தளபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.