சீனாவிற்கு எதிராக முத்தரப்பு கூட்டணி அமைத்தது அமெரிக்கா - புதிய பாதுகாப்பு அமைப்பில் பிரிட்டன், ஆஸ்திரேலியாவுக்கு இடம்
Sep 17 2021 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோ-பசிபிக் பாதுகாப்புக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்சீன மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளில் கனிமங்கள், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. உலகலாவிய வர்த்தகத்துக்கும் இப்பகுதி இன்றியமையாததாக உள்ளதால், இப்பகுதியில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக புருணை, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோரி வருகின்றன. ஆனால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென்சீனக் கடலின் 1 புள்ளி 3 மில்லியன் சதுர மைல் பரப்பளவையும் தனது இறையாண்மைக்கு உட்பட்டதாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக தென்சீனக் கடல் பகுதியில் சமநிலையை நிலைநாட்டவும், தனது ஆதரவு நாடுகளுக்கு உதவவும் அமெரிக்கா அவ்வப்போது போர்க் கப்பல்களை அனுப்பி வருகிறது.
இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக ஆக்கஸ் என்ற பெயரிலான புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை ஆஸ்திரேலியா பெற உதவுவதற்கும் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணிக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இக்கூட்டணி, அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதிக்கும் என்றும், ஆயுதப் போட்டியை அதிகரிக்கும் என்றும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு முயற்சிகளை பாதிக்கும் என்றும் சீனா கூறியுள்ளது.