அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உறவினர்கள் உள்பட 900க்கும் மேற்பட்டோர் ரஷ்யாவுக்குள் நுழைய முடியாது - ரஷ்ய அரசு அதிரடி அறிவிப்பு
May 22 2022 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது உறவினர்கள் உள்பட 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதுதவிர, ரஷியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ரஷ்ய கூட்டமைப்புக்குள் நுழைய நிரந்தர தடை விதிக்கப்பட்ட அமெரிக்க குடிமக்களின் பட்டியலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ரஷ்யர்களுக்கு எதிராக வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகிற தனிநபர்கள் இந்த பட்டியலில் இருப்பதாகவும், இதில், அமெரிக்க பொதுமக்கள் வருவதில்லை என்றும், அமெரிக்க மக்கள் எப்போதும் தங்களால் மதிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது உறவினர்கள், சில அமெரிக்க அதிகாரிகள் என 963 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.