ஆஸ்கார் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரம் - மன்னிப்பு கேட்டார் நடிகர் வில் ஸ்மித்
Jul 30 2022 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்கார் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரம் குறித்து நடிகர் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாடமி உத்தரவிட்டது. இந்தநிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வில் ஸ்மித், தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல என்றும், இதற்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அவருடன் எப்போது வேண்டுமானாலும் பேச தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.