தாய்வான் பிரச்னை எதிரொலி - அமெரிக்காவுடனான பருவநிலை மற்றும் ராணுவ ஒத்துழைப்பை நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவிப்பு
Aug 6 2022 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின் எதிரொலியாக அந்நாட்டுடனான பருவநிலை, ராணுவ ஒத்துழைப்புகளை நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் கடந்த 2 ஆம் தேதி தைவான் தலைநகர் தைபேவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அந்நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் சீனா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 2 நாட்களாக தைவானைச் சுற்றிலும் முற்றுகையிட்டு சீனா அதிநவீன் டாங்பெங் ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது. இதனால் அங்கு தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்புகளை முழுவதும் நிறுத்திக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது. நான்சி பெலோசியின் தைவான் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவுடனான ராணுவ உரையாடல், பருவநிலை குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்டவிரோத இடப்பெயர்வு தொடர்பான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நிறுத்திக்கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது.