இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சென்ற சீன உளவு கப்பல் - அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தம்
Aug 16 2022 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவு கப்பலான யுவான்வாங்-5 இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் உளவுக் கப்பலான யுவான்வாங் 5-ல், ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்த பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இந்த கப்பல், இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. மேலும் அங்கேயே ஒருவார காலத்திற்கு நிறுத்தப்படவுள்ளது.
சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் என்றும், இதனால் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவு கப்பலான யுவான்வாங்-5 இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மலேசியா கடற்படை கப்பல்கள் அவ்வப்போது அம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் மற்றும் இதர பொருட்களை நிரப்பிக் கொள்ள அனுமதி கேட்கும். அதுபோல் சீனாவின் யுவான்வாங்-5 கப்பலுக்கும் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. அணுசக்தி போர்க் கப்பலுக்குத்தான் தாங்கள் அனுமதி மறுக்கமுடியும் என்றும், இது அணு சக்தி கப்பல் அல்ல என்றும் இலங்கை விளக்கம் அளித்துள்ளது.