சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி - சீனாவை சேர்ந்த பெண் வேடிக்கையாக பதிவிட்டதாக புதிய தகவல்
Sep 26 2022 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வேடிக்கை வதந்தி எனக் கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, கடந்த 16ம் தேதி நாடு திரும்பிய போது சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் பீஜிங்கை நோக்கி 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து வருவதாகவும், ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருப்பதாகவும், சீன விடுதலை ராணுவத்தின் தளபதி லீ சாவ்மிங் புதிய அதிபராக பதவியேற்று இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனால், உலகளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இத்தகவல் வேடிக்கை வதந்தி எனக் கூறப்படுகிறது. உலக நாடுகளின் ஊடகங்கள் செய்த தகவல் சரிபார்ப்பில், சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் முன்பாக, ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் வேடிக்கைக்காக தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான சீனர்கள் அதனை விரைவாக பதிவிட்டு பரப்பியதாக கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இதுகுறித்து சீன அரசோ, அதன் நட்பு நாடுகளோ விளக்கம் அளிக்காமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.