ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இஸ்ரேலே காரணம் - ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி குற்றச்சாட்டு
Oct 5 2022 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இஸ்ரேலும், அமெரிக்காவுமே காரணம் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடான ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப்பை சரியாக அணியாத பெண்களை கண்காணிக்க தனி போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை, சரியாக ஹிஜாப் அணியாததால் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், காவலர்கள் தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரான் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராகவும், அதிபர் ரைசிக்கு எதிராகவும், பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் ஈரானின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி வருவதால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என கூறியுள்ள ஈரான் அதிபர் ரைசி, அமெரிக்காவும், இஸ்ரேலுமே, ஈரானில் போராட்டத்தை தூண்டி வருவதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.