நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை கொட்டியதால் ஆக்லாந்து நகரில் அவசர நிலை பிரகடனம் : சர்வதேச விமானநிலையத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் விமான நிலையம் மூடல்
Jan 28 2023 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து நாட்டில் பலத்த மழை கொட்டித் தீர்த்த நிலையில், ஆக்லாந்து நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் அந்த விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. பல்வேறு நகரங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆக்லாந்து நகரில் அந்நாட்டு அரசு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. கடைகளில் இருந்து அடித்துவரப்பட்ட மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தண்ணீரில் மிதந்து சென்றதைக் காணமுடிந்தது. மழை பாதிப்பின் போது பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் உதவி கேட்டு வந்ததாக தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.