பதவியேற்று 100 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி : புவி வெப்பமயமாதலை தடுக்க முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் தொடரவேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு நகரங்களில் போராட்டம்
Apr 30 2017 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பதவியேற்று 100 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், புவி வெப்பமயமாதலை தடுக்க முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் தொடர வேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்றார். நேற்றுடன் அவர் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்தது. இதையொட்டி, வானொலி மற்றும் இணையதளம் மூலமாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், தனது அரசு பொறுப்பேற்ற இந்த 100 நாட்கள், அமெரிக்க வரலாற்றின் வெற்றிகரமான நாட்கள் என்றும், பறிபோன வேலைவாய்ப்புகளை திரும்ப பெற்றிருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், "இது ஒரு ஆரம்பம் தான்- இன்னும் நடுத்தர குடும்பத்தினர் மற்றும் பொருளாதார வர்கத்தினருக்கு, வரி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரத்தில் டென்வர், சிகாகோ, வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில், அதிபர் ட்ரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணகான மக்கள் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணிகள் நடைபெற்றன.புவி வெப்பமயமாதலுக்கு எதிராக, பாரீஸ் மாநாட்டில் அமெரிக்கா உட்பட 190 நாடுகள் கையெழுத்திட்டு, வரலாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கடும் சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பேரணிகள் நடைபெற்றன. முந்தைய அதிபர் ஒபாமாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை, ட்ரம்ப் தொடர்ந்து நிறைவேற்றவேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.