பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பதவி இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Aug 17 2017 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில், பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பதவி இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
பாகிஸ்தானில், நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது, அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எழுந்த "பனாமா பேப்பர்ஸ்" ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து புலன் விசாரணை நடத்த, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கை, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப், கடந்த மாதம் 28-ம் தேதி பதவியை விட்டு விலகினார். அந்நாட்டின் முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் Shahid Abbasi, பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரீஃபின் வழக்கறிஞர் Khawaja Harris, லாகூரில் உள்ள உச்சநீதிமன்ற பதிவகத்தில் தனித்தனியாக 3 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில், நவாஸ் ஷெரீஃபை தகுதிநீக்கம் செய்து வெளியிட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம், மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்புகள் வெளியாகும்வரை, ஏற்கனவே வெளியிடப்பட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீஃப் கேட்டுக்கொண்டுள்ளார்.