லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஸ்டீஃபன் பாட்டாக் தங்கியிருந்த அறையிலிருந்து எண்களால் எழுதப்பட்ட கடிதம் கண்டெடுப்பு : தீவிர விசாரணை
Oct 7 2017 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஸ்டீஃபன் பாட்டாக், தங்கியிருந்த அறையிலிருந்து, எண்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த ஞாயிறன்று நடந்த இசை நிகழ்ச்சியின்போது, திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலை நடத்திய 64 வயது ஸ்டீஃபன் பாட்டாக் என்பவர், தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இது தீவிரவாத தாக்குதல் அல்ல என அமெரிக்க உளவு அமைப்பான F.B.I அறிவித்தது. ஆனால், பாட்டாக் எதற்காக தாக்குதல் நடத்தினார், என கண்டறிய முடியாமல், F.B.I உள்ளிட்ட அமைப்புகள் திணறி வருகின்றன.
இதனையடுத்து, ஸ்டீஃபன் பாட்டாக்கின் தோழி மரிலோ டான்லியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பாட்டாக் தன்னிடம் மிகுந்த அக்கறையுடன் இருப்பார் என்று கூறிய மரிலோ, அவர் அமைதியானவர் என்றும் அன்பானவர் என்றும் தெரிவித்தார். மேலும், ஸ்டீஃபன் பாட்டாக், இது போன்ற தாக்குதலை நடத்துவார் என தனக்கு சிறிதும் தெரியாது என்றும் மரிலோ தெரிவித்தார். இதனால், தாக்குதலுக்கான காரணம் தெரியாமல் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், ஸ்டீஃபன் பாட்டாக் தங்கியிருந்த அறையிலிருந்து, எண்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அதனை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேண்டம் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சீட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.