6 ஆண்டுகளுக்கு பின்னர் புகையைத் தொடங்கியுள்ள ஜப்பானின் ஷின்மோ எரிமலை - எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
Oct 12 2017 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள ஷின்மோ என்ற எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புகையைத் தொடங்கியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் எற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் ஷின்மோ என்ற எரிமலை அமைந்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இங்கு எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளன.
இறுதியாக, கடந்த 2011-ம் ஆண்டு, ஜனவரி 19-ம் தேதி இந்த ஷின்மோ எரிமலை புகையத் தொடங்கி, அதே ஆண்டு, ஃபிப்ரவரி 1-ம் தேதி மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பின்போது, ஏராளமான வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பல் வானில் தூக்கியெறியப்பட்டது. இதன் தாக்கம் 8 கிலோ மீட்டர் வரையிலும் கட்டடங்களின் ஜன்னல்களை உடைக்குமளவு இருந்தது.
இந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கியுள்ளது. இந்த புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ள ஜப்பான் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.