வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுப்பது விபரீதத்தை ஏற்படுத்தும் - அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கருத்து
Oct 19 2017 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவுக்கு போர் மிரட்டல் அளிப்பது அபாயகரமானது என முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி, வடகொரியா நடத்திய 6-வது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையால், அங்கு சமீப காலமாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரியாவின் இத்தகையை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை, கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சி, வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த கூட்டுப் பயிற்சியால், பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பான இந்த சூழலில், தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான ஹிலரி கிளிண்டன் பங்கேற்று பேசினார். வடகொரியா விவகாரத்தில், போர் மிரட்டல் விடுப்பது அபாயகரமானது என்றும், குறுகிய பார்வை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.