ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையிலான ஆளுங்கட்சி முன்னிலை : வடகொரியா, தென்சீனக் கடல் போன்ற பிரச்னைகளில், உறுதியான நிலைப்பாட்டால் ஷின்ஸோ அபேக்கு மீண்டும் வெற்றி என வல்லுநர்கள் கருத்து
Oct 23 2017 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில், நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையிலான ஆளுங்கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
ஜப்பான் நாட்டில், அண்மையில் தொடங்கப்பட்ட Party of Hope என்னும் கட்சி, டோக்கியோவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வென்றதால், அந்தக் கட்சி மீது திடீர் எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஷின்ஸோ அபே கட்சியிலிருந்து, மூத்த தலைவர்கள் உட்பட பலர் வெளியேறி, பார்ட்டி ஆஃப் ஹோப் கட்சியில் சேர்ந்தனர். இதனால், ஷின்ஸோ அபேவுக்கு அரசியல் பின்னடைவு என்று கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு வரை பதவிக்காலம் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தலை ஷின்ஸோ அபே திடீரென அறிவித்து, எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், ஷின்ஸோ அபேயின் முடிவு சரியானதே என, தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஜப்பானின் பொருளாதாரத்தை சீராக வைக்க, அவர் உரிய முயற்சிகள் எடுத்து வருகிறார் என்ற நம்பிக்கையும், வடகொரியா, தென்சீனக் கடல் போன்ற பிரச்னைகளில், ஷின்ஸோ அபேயின் உறுதியான நிலைப்பாடும் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
இதனிடையே, Party of Hope கட்சித் தலைவரும், டோக்கியோ ஆளுநருமான யூரிகோ கோயிகே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தது, அவரது கட்சி ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது மட்டுமல்லாமல், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வேளையில், பிரான்சில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள யூரிகோ கோயிகே சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.