பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரம் - ஐ.நா. தீர்மானத்தை மீண்டும் எதிர்க்க சீனா திட்டம்
Oct 31 2017 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை மீண்டும் எதிர்க்க, சீனா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில், கடந்த ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா தீர்மானம் தாக்கல் செய்தது.
மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில், 14 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேறவில்லை. இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை தாக்கல் செய்தன. ஒருமித்த கருத்து இல்லை என்று கூறி, சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், வரும் 2-ம் தேதி கூடுகிறது. அப்போது, இந்தத் தீர்மானம், மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த தீர்மானத்துக்கு மீண்டும் முடக்கும் முயற்சியில் சீனா உள்ளது. மசூத் அசார் விஷயத்தில், இன்னமும் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஒருமித்த கருத்து ஏற்பட்டாமல் மட்டுமே, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என சீனா கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு சீனாவின் இந்த நிலைப்பாட்டால், வரும் கூட்டத்திலும், மசூத் அசாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.