அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில், கடந்த 10 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 13 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மீது, உலகின் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என்பதால் இந்த கணிப்பு. இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அமெரிக்கா மீதான பார்வையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாகரிகத்தில் மேம்பட்டு இருந்தாலும் எதற்காக இப்படிச் சிலர் துப்பாக்கிகளால் அப்பாவிகளைக் கொன்று வருகின்றனர்? என்ற ஐயம் கலந்த கேள்வி உலகத்தார் அனைவருக்கும் எழுகிறது. நேற்று முன்தினம், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சுதர்லாண்ட் என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தும் அமெரிக்க துப்பாக்கி தாக்குதல் குறித்த புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52 ஆயிரத்து 385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் 13 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு, தீவிரவாதத்தை விட பெரிய தலைவலியைத் தருவது, உள்நாட்டு துப்பாக்கி கலாச்சாரம்தான். 2014-ம் ஆண்டுக்கு பின்னர், தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களைக் கணக்கிட்டால், இது வெறும் 1 சதவிகிதம்தான் என, வியக்க வைக்கிறது அந்த புள்ளிவிவரம். துப்பாக்கிச்சூட்டில் இவ்வளவு பேர் உயிரிழந்திருந்தாலும், துப்பாக்கிகளால் பிரச்சனை இல்லை, அதனைக் கையாளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் பிரச்சனை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளலாம் என்கிறது அங்குள்ள சட்டம். ஆனால், அதே துப்பாக்கிகள், மற்றவர்களின் உயிரைக் குடிக்கும் போது, இதில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? என்ற கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்காவில், யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற நிலை இருக்கும் வரை, இந்த அவலம் தொடரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.