ஃபிலிப்பைன்சை புரட்டிப் போட்ட டெம்பின் புயல் - நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி
Dec 24 2017 7:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபிலிப்பைன்ஸ் நாட்டில், இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 'Tembin' புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு பிலிப்பைன்சின் Mindanao மாகாணத்தில் இந்தப் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டுபோத், பியாகபோ ஆகிய இருநகரங்களும் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இங்கு வீடுகள் பலவும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன.
புயல், மழை, நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போய் விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுபோத் நகரில் மட்டுமே 19 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இடிபாடுகளைத் தோண்டி உடல்களை மீட்கும் பணியில் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, தொலைத் தொடர்பு சேவையும் முடங்கி விட்டது.
ஒரு வாரத்துக்கு முன்புதான் 'கய்டாக்' புயல் பெரும்சேதத்தை ஏற்படுத்தி, பலரை பலி கொண்டது. அந்த சுவடு மறைவதற்கு முன்பாக இப்போது 'Tembin' புயல் பெரும் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி இருப்பது பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.