நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 2018 புத்தாண்டு பிறந்தது - கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் பொது மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
Jan 3 2018 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் 2018 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி, தலைநகர் ஆக்லாந்தில், கண்கவர் வாணவேடிக்கை வெடித்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
உலகில் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. அதன்படி, 2018 ஆண்டை வரவேற்கும் வகையில், தலைநகர் ஆக்லாந்தின் ஸ்கை டவர் முன்பு கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், புத்தாண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கண்கவர் வாண வேடிக்கையுடன், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்து புதிய ஆண்டை வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் திரண்டிருந்த சுமார் லட்சக்கணக்கானோர், 2018 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். இதனையொட்டி, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்று ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
சிட்னியை தொடர்ந்து, மெல்பர்ன் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, சீனா, ஃபிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் வரிசையாக புத்தாண்டு பிறந்ததையடுத்து, கொண்டாட்டங்கள் களைகட்டின.