அமெரிக்காவின் ஃபிளோரிடோ மாகாண பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 17 பேர் உயிரிழந்த சோகம்
Feb 15 2018 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் ஃபிளோரிடோ மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தின் பார்ட் லேண்டு பகுதியில் ஸ்டோன்மேன் டக்லஸ் என்ற உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பள்ளியில் இருந்தவர்களை வெளியேற்றி அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் நிகோலஸ் குரூஸ் என தெரிய வந்தது. எதற்காக அவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஃபுளோரிடாவின் ஆளுநர் ஸ்காட்டை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை பள்ளிகளில் 283 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.