சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் தொழில் துவங்க ஆண்களிடம் இனி அனுமதி கேட்கத் தேவையில்லை : அரசு அதிரடி அறிவிப்பு
Feb 19 2018 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், தொழில் துவங்க, ஆண்களிடம் இனி அனுமதி கேட்கத்தேவையில்லை என அந்த நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். பெண்கள் விளையாட்டு அரங்கத்திற்கு வர அனுமதி வழங்கியது, கார் ஓட்ட அனுமதி வழங்கியது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்த அதிரடி அறிவிப்புகளால் தற்போது, சவுதி அரேபியாவில், 22 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் மன்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், இந்த வரிசையில், சவுதிப் பெண்கள், புதிதாக தொழில் துவங்க வேண்டுமானால், அதற்கு, தந்தை, கணவர் அல்லது சகோதரன் என, யாராவது ஒருவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, சட்டம் இருந்தது. அதை மாற்றி இனி, ஆண்களின் அனுமதி இன்றி, பெண்கள் தொழில் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு நாட்டினரும் பெரும் ஆதரவையும், தங்களது பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.