கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் : வடகொரியா அறிவிப்பு
Feb 27 2018 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தினார். தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நேசக்கரம் நீட்டியதும், வாஷிங்டனையும் மிரட்டும் விதத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சோதனைகளை நடத்தினார்.
மேலும் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்பை சீண்டும் விதமாக பேசி வந்தார். இதனால் அமெரிக்கா, கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பி அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தென் கொரியாவுக்கு போர் பயிற்சியும் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக போர் பதற்றம் நீடித்து வருகிறது.
ஆனால், சமீபகாலமாக கிம் ஜாங் அன்னின் நடவடிக்கை மாறத் தொடங்கி இருப்பதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவு மேற்கொள்ள விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.