உலகமே எதிர்பார்க்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு - அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு
May 11 2018 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகமே எதிர்பார்க்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர், அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர்.
அடுத்தடுத்த ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் தென்கொரியா சென்ற அவர், அங்கு அதிபர் மூன் ஜே உன்-னை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை, உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடத்த பல்வேறு நகரங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்னை சந்திக்க உள்ளதாகவும், உலக அமைதிக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் சிறப்பு மிக்க தருணம் அது, எனவும் தெரிவித்துள்ளார்.