தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்றும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும், தமிழக மக்களுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களும் போராடி வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன், டார்வின், பெர்த், அடிலேட், கான்பரா, ஹோபார்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலிய வாழ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள், இந்திய வெளி விவகாரத்துறை அலுவலகத்தில் அதன் கவுரவ உயர் அதிகாரியை சந்தித்து, ஸ்டெர்லைட் விவகாரத்தில், தமிழக அரசு உரிய விசாரணை குழு அமைத்து நியாயமான முடிவு எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசின் அரசாணை பார்த்ததும், ஆலை மூடப்பட்டதற்கும் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மூடப்பட்ட ஆலை, நிரந்தரமாக மூடப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், நியாயமான முழு விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள், இனி எப்போதும் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் தங்களது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் குவைத் மண்டலத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமியின் அரசு, பா.ஜ.க அரசிற்கு கிளையாக செயல்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் நிறைவேற்றிய இந்த தீர்மானத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக குவைத் மண்டலத்தின் சார்பில், அமைப்பாளர் திரு. மதுரை எம். சக்திவேல் ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.