அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் : வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு
Jun 5 2018 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு இருவரும் சந்தித்து பேச உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வடகொரியா, அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையைக் கைவிட முன்வந்ததையடுத்து, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் வுன்னுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் Sarah Sanders தெரிவித்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபரின் சிறப்பு தூதுக்குழுவினர் அமெரிக்க அதிபரை சந்தித்து அளித்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபற்றி தெரிவிக்க சாரா சாண்டர்ஸ் மறுத்துவிட்டார். அதேசமயம், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடும்வரை அதன்மீதான பொருளாதார தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் தொடர்ந்து நீடித்தபோதிலும், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், அந்நாட்டின்மீது 'அதிகபட்ச அழுத்தம்' என்ற வார்த்தையை இனிமேலும் பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.