கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 69-ஆக அதிகரிப்பு : 300-க்கும் மேற்பட்டோர் காயம்
Jun 5 2018 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கவுதமாலாவில் Fuego எரிமலை வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 69-ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில், அந்நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Fuego எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. அதிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவிற்கு செந்நிறத்தில் 700 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பல கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சமடைந்துள்ளனர். Fuego எரிமலையின் சீற்றத்தில் சிக்கி, முதற்கட்டமாக 25 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்து சிதறுவதால் அந்நாட்டின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கவுதமாலாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள Fuego எரிமலை வெடிப்பு பாதிப்பிலிருந்து மீட்புப் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்தபடி எச்சரிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Fuego எரிமலை அருகே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. காற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.