கனடாவில் கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் : கஞ்சா பயன்பாட்டை அங்கீகரிக்கும் 2-வது நாடு கனடா
Jun 21 2018 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் கஞ்சா என்னும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகள் கஞ்சா என்னும் போதைப் பொருளின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. கஞ்சா செடிகளை பயிரிடுவது மற்றும் அதனை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாக உள்ள நிலையில், கனடா நாட்டில் கஞ்சா பயன்பாட்டுக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கனடாவில், கஞ்சா வைத்திருப்பது மற்றும் அதனைப் பயன்படுத்துவது குற்றம் என கடந்த 1923-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2001-ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம், அதனை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கான தடை அமலில் இருந்து வந்தது. எனினும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி அங்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனை அந்நாட்டு அரசு பரிசீலினை செய்தபின், முறையான அனுமதியுடன் கஞ்சா செடிகளை வளர்க்கவும், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும் சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடர்பான மசோதா மீது கனடா செனட் சபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனையடுத்து, கஞ்சாவை சட்டப்படி பயன்படுத்தும் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பின் ஒப்புதல் கிடைத்த பின், அது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே, உருகுவே நாட்டுக்கு பிறகு கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் 2-வது நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.