கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதா - நிராகரித்தது ஆர்ஜென்டினா நாடாளுமன்றம் - எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
Aug 10 2018 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்ஜென்டினாவில், கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது. இந்த முடிவை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்னமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில், கருக்கலைப்பு என்பது பாவமாகக் கருதப்படுகிறது. இங்கு, பெண்கள் தங்கள் விருப்பப்படி கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், இதேபோன்ற தடை விதிக்கப்பட்ட அயர்லாந்து நாட்டில், கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு, அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்தொடர்ச்சியாக, ஆர்ஜென்டினாவிலும் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலில், தற்போது அந்த மசோதாவை, அந்நாட்டு மேலவை நிராகரித்தது.
மசோதா தோல்வி அறிவிப்பு வெளியானதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணிய அமைப்பினர், இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரத் தடுப்பு போலீசார் மீது, எரியும் குப்பைகளையும், மரத் துண்டுகளையும் வீசி, தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
இந்த நாட்டில்தான் தற்போதைய கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்ஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.