உலக சிங்க தினம் கொண்டாட்டம் : பந்தை தட்டித்தட்டி விளையாடி மகிழும் சிங்கங்கள்
Aug 10 2018 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"காட்டின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கத்தினை கவுரவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி 'உலக சிங்க தினமாக' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் மக்கள் ஒன்று கூடி தங்களால் இயன்ற வகையில் சிங்கத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்.
வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்கும் சிங்கங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு பல ஆயிரம் வருடங்களாக தொடர்கிறது. ஃபிரான்சின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பேலியோலித்திக்' கால மனிதனின் குகை ஒவியங்களில் கூட சிங்கங்கள் பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன.
வரலாற்று ரீதியாக சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவின் வட மேற்கு பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன.
பைபிளில் கூட 157 இடங்களில் சிங்கங்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேறு எந்த மிருகங்களை பற்றியும் இந்த அளவில் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு நாடுகளின் கொடிகள், சின்னங்கள் ஆகியவற்றிலும் சிங்கத்தின் உருவம் இடம்பெறுகிறது.
அப்பேற்பட்ட சிங்கங்களின் வாழிடம் அழிக்கப்படுவது, உணவு கிடைக்காமல் போவது, மனிதர்களினால் உண்டாகும் அபாயம் ஆகியவையே தற்போது சிங்கங்களுக்கான தலையாய பிரச்சினைகளாக இருக்கின்றன.
ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சிங்கங்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து வருகிறது என்ற போதும், இந்தியாவைப் பொறுத்தவரை சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹெய்தி, இன்டி, ரூபி என்ற பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு பொருட்களால் உற்சாகம் அடைந்துள்ளன. சிறப்பு பந்துகள், வண்ணங்களால் அழகுபடுத்தப்பட்டு, மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் சிங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த பந்தை சிங்கங்கள் காலால் தட்டித்தட்டி விளையாடி மகிழும் காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்.