இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எம்..பி. பரபரப்பு தகவல் - இலங்கை அரசு திட்டவட்ட மறுப்பு
Nov 8 2018 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. வெளியிட்ட தகவலை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரனில் விக்ரம சிங்கே ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன அதிபராகவும், ரனில் பிரதமராகவும் பதவியேற்றனர்.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேன, திடீரென ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரை பிரதமராக நியமித்தார். இது இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரனிலும், ராஜபக்சேயும் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில், வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட சிறிசேன திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், திடீர் திருப்பாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சி எம்..பி. அஜித் பீ பெரெரா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை இலங்கை அரசின் தகவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்பது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்றும், அரசுக்கு அப்படி ஒரு திட்டமில்லை என்றும் கூறியுள்ளது.