ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு - அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு
Dec 7 2018 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரணில் விக்ரமசிங்கே மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்த இலங்கை அதிபர் சிறிசேன, தனது முடிவுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் நாடாளுமன்றத்தையும் கலைத்தார். ஆனால், சிறிசேனவின் உத்தரவிற்கு, தடை விதித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் தடை விதத்தது. இதை எதிர்த்து ராஜபக்சே மேல் முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே, பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அதிபர் சிறிசேன ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் விடுத்த அறிக்கையில், அரசியல் குழப்பம் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்காது என்று அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் 12ம் தேதி கூடவுள்ள நிலையில், அன்றைய தினமோ, அல்லது மறு தினமோ ரணில் மீது நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரணிலுக்கு தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி ஆகிய கட்சிகளின் துணையுடன் 122 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. எனவே, அவர் மீண்டும் பிரதமராக தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.