நியூசிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழப்பு - பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள மசூதிகளை மூட உத்தரவு
Mar 15 2019 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு, திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மற்றொரு மசூதியிலும், மருத்துவமனை வாசலிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், மற்றொரு இடத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மர்ம நபர்கள் இணையத்தில் நேரலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்களைத் தொடர்ந்து நகரின் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன், இந்த நாள், நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள் என்றும் கருப்பு தினம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, பாதுகாப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளையும் மூட நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.