பாகிஸ்தானின் லாகூரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் : 3 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழப்பு - 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 8 2019 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் லாகூரில் சூஃபி மசூதி அருகே தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 போலீசார் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
லாகூர் நகரில் புகழ்பெற்ற தாதா தர்பார் என்ற சூஃபி மசூதி அமைந்துள்ளது. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ரம்ஜான் நோன்பு தொடங்கிய நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் இன்று இந்த மசூதிக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்திருந்தனர். பெண்கள் நுழையும் வாயில் அருகே, தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் அதிகாரிகளின் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரிகள் 3 பேர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2010ம் ஆண்டு இதே மசூதி அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.