காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு
Jul 23 2019 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து இம்ரான்கான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் வலியுறுத்தினார். மேலும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படத் தயார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். பிரதமர் மோடியும் காஷ்மீர் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படுத்த தன்னிடம் உதவும்படி கேட்டிருக்கிறார் என்று தெரிவித்த டிரம்ப், இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்யுமாறு அதிபர் டிரம்பை, பிரதமர் திரு.மோடி கேட்டதாக கூறியதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் மறுத்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பிடம் எந்த ஒரு கோரிக்கையும் பிரதமர் முன்வைக்கவில்லை என கூறினார். இரு நாடுகளிடையேயான பிரச்சனைகள், உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்க்கப்படும் என்றும், சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம், இதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் என்றும் திரு. ரவீஷ் குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.