உலக நாடுகள் இந்தியாவுக்குதான் ஆதரவாக உள்ளன - யாரும் தங்களை நம்பவில்லை என பாகிஸ்தான் அமைச்சர் புலம்பல்
Sep 13 2019 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மக்கள் இந்தியாவையே நம்புகிறார்கள் என்றும், பாகிஸ்தானை நம்ப மறுக்கிறார்கள் என்றும் அந்நாட்டு அமைச்சர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலக மக்கள், பாகிஸ்தானை நம்ப மறுக்கிறார்கள் என்று கூறினார். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறார்கள், மக்களுக்கு மருந்து பொருட்கள் தருவதில்லை என்று பாகிஸ்தான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறார்கள் என்றும், இந்தியாவைத்தான் நம்புகிறார்கள் என்றும் விரக்தியுடன் தெரிவித்தார்.
பாகிஸ்தானை இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், நாட்டை அழித்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், பாகிஸ்தானின் நற்பெயரை அவர்கள் அழித்து விட்டார்கள் என்றும் வேதனை தெரிவித்தார். அதனால்தான், பாகிஸ்தான் பொறுப்பான நாடு அல்ல என்று மக்கள் கருதுகிறார்கள் என்று கூறிய அவர், பிரதமராக இருந்த எல்லோரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான், தற்போது ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் இஜாஸ் அகமது ஷா அப்போது வலியுறுத்தினார்.