ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு : வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் அறிக்கை வெளியீடு
Sep 15 2019 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடைவை மட்டுமின்றி, அந்த இயக்கத்திற்கும் பெருத்த சரிவை உண்டாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல் கொய்தா இயக்கத்திற்கு பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை பொறுப்பை ஏற்றார். 30 வயதான அவர், அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுமாறு அல்கொய்தா அமைப்பினருக்கு ஆடியோ செய்திகள் மூலமாக தகவலை பரிமாறி வந்தார். இதனால் அவரது தலைக்கு ஒரு மில்லியன் டாலர்களை பரிசுத் தொகையாக அமெரிக்க அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற விமான தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது.