வடகிழக்கு சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தியது துருக்கி: 120 மணிநேரத்திற்கு குர்தீஷ் படைகள் வெளியேற கெடு
Oct 18 2019 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு சிரியாவில் நடத்திவரும் தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்திவைக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.
சிரியாவில் குர்திஷ் படையினருக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க துருப்புகள், கடந்த வாரம் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து, திடீரென சிரிய எல்லைக்குள் அண்டை நாடான துருக்கி படைகள் நுழைந்து குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், துருக்கியுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் பென்சி மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் போம்பியோ ஆகியோர் அந்நாட்டு தலைநகர் அங்காரா சென்றனர். துருக்கி அதிபர் எர்டோகனுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பென்சி குர்திஷ் படைகள் துருக்கி சிரியா எல்லையில் இருந்து பின்வாங்க 120 மணி நேர கெடுவை துருக்கி விதித்துள்ளதாக தெரிவித்தார். அதுவரை தாக்குதல் நடத்தப்படாது என துருக்கி உறுதியளித்ததாகவும் பின்சி குறிப்பிட்டார். குர்தீஷ் படைகள் எல்லையில் இருந்து பின் வாங்கினால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார். துருக்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்நாட்டு மீது மேற்கொண்டு பொருளாதார தடை விதிக்கப்படாது என அமெரிக்க அறிவித்துள்ளது. தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், துருக்கியின் படைகள் எல்லையிலே நிலை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.