வடகிழக்கு சிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து துருக்கி படைகள் ரோந்து பணியில் தீவிரம்
Nov 2 2019 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகிழக்கு சிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து துருக்கி படைகள் நேற்று முதல் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வடக்கு சிரியா பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குர்து படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது. எனினும் தங்கள் நாட்டு குர்து தீவிரவாதிகளுக்கு அந்த படையினர் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி வரும் அண்டை நாடான துருக்கி, குர்து படையினரையும் தீவிரவாதிகளாக கருதி வருகிறது. இந்த நிலையில், குர்து கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் இருந்து வெளியேற அமெரிக்க படைகளுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள குர்து படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது. தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளை தங்க வைப்பதற்கான பாதுகாப்பு மண்டலத்தை வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, துருக்கியுடன் ரஷ்யா கடந்த வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இருந்து குர்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்த பகுதியில் ரஷ்யாவும், துருக்கியும் கூட்டாக ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்தன. அதன்படி, நேற்று முதல் வடகிழக்கு சிரியாவில் ரஷ்யாவுடன் இணைந்து துருக்கி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கவச வாகனங்களில் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வடகிழக்கு சிரியாவில் அமைந்துள்ள எண்ணெய் கிணறுகளை பாதுகாக்கும் பணியில் அமெரிக்க ரோந்து படையினர் ஈடுபட்டுள்ளனர். Rmeilan-Qahtaniyah நகரங்களுக்கிடையே 20 கிலோமீட்டர் தொலைவுக்கு கவச வாகனங்களில் இந்த ரோந்து பணியில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.