தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணைக் கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Nov 14 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்க, தமிழக அரசு, தொடர் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பழனிசாமி அரசு, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உரிய ஆதாரங்களையும், சரியான முறையில் வாதங்களையும் எடுத்து வைப்பதற்கான பணிகளையும் உடனடியாக செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
காவிரியின் துணை ஆறுகளில் எல்லாம் அணைகளைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமல் செய்து வரும் கர்நாடகா, தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் புதிய அணையினை கட்டி வருகிறது - தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக மாநிலம் யார்கோட் என்ற இடத்தில் எழுப்பப்படும், இந்த அணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது - "நதியின் கீழ்படுகை மாநிலங்களுக்கு அந்த நதிநீரில் உரிமை இருக்கிறது" என உலகம் முழுவதும் பின்பற்றப்படும் விதி இதன் மூலம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வாதங்களைப் பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான முறையில் எடுத்து வைக்கவில்லையோ என்கிற கேள்வியும் ஆதங்கமும் எழுவதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக்கு எதிரான கர்நாடகாவின் சட்டவிரோத அணை எழுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்த கட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிற தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும், தமிழகத்தின் நலனைக் காவு கேட்கிற புதிய அணையைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று எப்படியாவது கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.