பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல புறப்பட்ட மக்கள்... போதிய பேருந்துகள் இல்லாததால் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காத்து கிடந்து தவிப்பு
Jan 14 2024 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோயம்படு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாத பயணிகள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் மிகவும் அவதியுற்றனர். இதனால், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மீண்டும் தங்களின் இருப்பிடங்களுக்கே திரும்பிச் சென்றனர். மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் வெறும் கண் துடைப்பிற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் குறித்து விவரம் கேட்டால் அலட்சியமுடன் பதில் அளிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். போதிய பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, பயணிகள் கலைந்து சென்றனர்.
தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இல்லாததால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போதிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததாலும், வரும் பேருந்துகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என நடத்துனர்கள் தெரிவிப்பதாலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சொர்பமான அளவில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளால், பேருந்தினுள் ஏறி இருக்கைகளை பிடிக்க பயணிகள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போக்குவரத்து துறை சரியான திட்டமிடுதல் இன்றி பேருந்துகளை இயக்கியதால் கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.